அஜீத்தும் சரணும் சேர்ந்தால் அட்டகாசம்தான் என்பதை ஒருமுறை அல்ல, மூன்று முறை நிரூத்திருக்கிறார்கள்.
அஜீத்துக்கு வசூல் நாயகன் அந்தஸ்தைக் கொடுத்தவை சரண் இயக்கிய காதல் மன்னன் மற்றும் அமர்க்களம் படங்கள்தான். பின்னர் சில காரணங்களால் இருவரும் படம் பண்ணாமல் பிரிந்து நின்றனர். இப்போது சிவாஜி பிலிம்ஸூக்காக மீண்டும் இணைகிறார்கள். படத்துக்கு அசல் என பெயர் வைத்துள்ளனர். அஜீத்துக்கு இது 49வது படம்.
ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு சுராங்கனி எனும் பெயர் சூட்டி கவுதம் மேனனை வைத்து இயக்கும் திட்டத்திலிருந்தார்கள். ஆனால் அவருக்கும் அஜீத்துக்கும் ஏழாம் பொருத்தமாகிவிட, பின்னர் கில்லி தரணியை நாடினார்கள். ஆனால் அவர் போட்ட கண்டிஷன்கள் ஒத்துவரவில்லை. பின்னர் விஷ்ணுவர்தனிடம் பேசிப்பார்த்து எதுவும் முடிவாகாமல் தவித்தவர்கள் சரணை நாடினார்கள்.
மிகப் பெரிய சரிவுக்குப் பின் மோதி விளையாடு படத்தை எடுத்து தனது மார்க்கெட்டை புதுப்பிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் சரணுக்கு இந்த வாய்ப்பு ஒரு வரப்பிரசாதமாக அமைய, உற்சாகத்துடன் ஒப்புக் கொண்டுள்ளார்.
பில்லாவுக்கு அடுத்து ஏகனை சுமாரான படமாகக் கொடுத்துவிட்ட அஜீத், இந்தப் படத்தில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயம்.
படத்தின் நாயகியாக ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட சமீரா ரெட்டி நீடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும்.
அசல், முதலுக்கு மோசமில்லாமல் வர வாழ்த்தி வைப்போம்!
<< முன்செல்ல