மீண்டும் ஒரு துள்ளல் இசையை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
இம்முறை திரைப்படத்துக்கோ தனி ஆல்பத்துக்கோ அல்ல. கிரிக்கெட்டுக்கு. ஆம்... அடுத்த மாதம் 3-ம் தேதி துவங்கவுள்ள ஐபிஎல் சாம்பியன்ஸ் லீக் டிவென்டி 20 கிரிக்கெட் போட்டிக்கு தீம் மியூசிக் நம்ம ஏஆர் ரஹ்மான்தான். முற்றிலும் பொழுதுபோக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் டிவென்டி 20 கிரிக்கெட் பெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் கணிசமான வருவாயையும் பிசிசிஐக்குப் பெற்றுத் தந்தது.
இந்த வருவாயை ஆண்டு தோறும் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ள பிசிசிஐ, மீண்டும் இந்தப் போட்டிகளை வரும் டிசம்பர் 3-ம் தேதிமுதல் நடத்துகிறது. இந்தப் போட்டிக்கு தீம் இசை அமைக்க வேண்டும் என்று ஐபிஎல் அதிகாரிகள் கேட்டபோது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். இதில் பாடல் வரியோ, வார்த்தைகளோ இடம் பெறாது. ஆனால் போட்டியின் தீவிர உணர்ச்சி, வியப்பு, சக்தியை பிரதிபலிக்கும் வகையில் இசையமைப்பு இருக்கும். இந்த இசையின் பின்னணியில் கிரிக்கெட் வீரர்கள் இடம் பெறுவார்கள், என்கிறார் ரஹ்மான்.
2010-ம் ஆண்டு புதுடெல்லியில் நடக்க உள்ள காமன்வெல்த் விளையாட்டுக்கான தீம் இசை உருவாக்கும் பொறுப்பையும் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்செல்ல