இதுவரை தயாரிப்பு குழப்பத்தில் இருந்த ‘எந்திரன்'னை தன் கைக்கு மாற்றியுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். நூறு கோடி ரூபாய் பட்ஜெட், நாயகன் சூப்பர் ஸ்டார், நாயகி உலக அழகி, இயக்கம் ஷங்கர் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்டது எந்திரன். எத்தனை கோடியானாலும் செலவு செய்ய தயார் என களத்தில் இறங்கிய ஐங்கரன் இண்டர்நேஷனல் திடீரெனெ தயாரிப்பில் சுனக்கம் காட்டவே, குழப்பத்தில் நின்றது படப்பிடிப்பு.
இதனையடுத்து படம் தொடருமா? என்ற சந்தேகம் கோடம்பாக்கத்தில் பற்ற ஆரம்பித்தது. ஷங்கரும் ரஜினியும் இணைந்தே படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர் என்ற செய்தியும் கசிந்தது. இதனிடையே இயக்குனரிடமும் ஹீரோவிடமும் பேச்சு நடத்திய சன் பிக்சர்ஸ் நிறுவனம் எந்திரனை தயாரிக்க முடிவு செய்தது.
இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை நேற்று வெளியிட்டது சன் பிக்சர்ஸ். இந்த அறிவிப்பின்போது கலாநிதி மாறன்,ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், சன்பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோர் இருந்தனர்.
இதுபற்றி கலாநிதிமாறன் கூறுகையில்,” எங்கள் நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய படம். இந்தியாவிலேயே மாபெறும் படமாக இது அமையும் என்று உணர்வுபூர்வமாக நம்புகிறேன்.சர்வதேச அளவிலும் மிகப்பெரிய உயரத்தை எந்திரன் தொடும்” என்றார். “ சன் பிக்சர்ஸுடன் இணைவதிலும், ரஜினிகாந்துடன் பணிபுரிவதிலும் பெருமைப்படுகிறேன்” என ஷங்கர் குறிப்பிட்டார்.
“ இரண்டு வருடத்திற்கு முன்பே சன் டி.வி தயாரிப்பில் நடிக்கவேண்டுமென என்னிடம் பேசினார்கள். சந்தர்ப்பம் வரும்போது நடிப்பதாக சொல்லியிருந்தேன். ஆனால் அது இந்த படமாக அமைந்ததில் ரொம்ப சந்தோஷம். கலாநிதிமாறனுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமையடைகிறேன்” என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
முன்செல்ல