Tamil Cinema | Kollywood | Tamil Movies

மீண்டும் கமல் - கே.பி.!
[ Friday, 28 November 2008, 07:02.31 PM GMT +05:30 ]

மேலும் புதிய படங்கள் இயக்குநர் கே.பாலச்சந்தர் படத்தில் மீண்டும் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் கமல்ஹாசனை வைத்துத புதிய படம் ஒன்றை தயாரிக்கவுள்ளது. மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் குருவும், சிஷ்யரும் இப்படத்தின் மூலம் இணைகின்றனர். சமீபத்தில்தான் இன்னொரு சிஷ்யரான ரஜினிகாந்த்தை வைத்து குசேலன் படத்தைக் கொடுத்தது கவிதாலயா என்பது நினைவிருக்கலாம். கமல்ஹாசனும், கவிதாலயாவும் கடைசியாக இணைந்தது 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான உன்னால் முடியும் தம்பி படத்தில். அதன் பின்னர் இரு பெரும் இமயங்களும் இணையவில்லை.

இந்த நிலையில் கமல்ஹாசனை வைத்து கவிதாலயா புதிய படம் ஒன்றை தயாரிக்கவுள்ளது. இதுகுறித்து பாலச்சந்திரன் மகளும், கவிதலாயா நிர்வாகியுமான புஷ்பா கந்தசாமி கூறுகையில், ஆமாம், கமல்ஹாசனுடன் இணைந்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளோம். கவிதாலயாவுக்காக ஒரு படம் செய்து தருவதாக கமல்ஹாசனும் ஏற்கனவே உறுதியளித்துள்ளார். தற்போது நல்ல கதை மற்றும் பொருத்தமான இயக்குநரைத் தேடிக் கொண்டிருக்கிறோம். கமல்ஹாசனின் இயக்கத்தில் இப்படத்தைத் தயாரிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் அவர் வேறு ஒரு மெகா பட்ஜெட் படத்துடன் இணைந்துள்ளதால் அது சாத்தியமா என்று தெரியவில்லை.

இந்தப் படம் கமல்ஹாசனையும், கவிதாலயாவையும் மிகப் பெரிய உயரத்திற்கு இட்டுச் செல்லும். கதை, இயக்குநர் முடிவானவுடன் மற்ற விவரங்களைக் கூறுகிறேன் என்றார். மர்மயோகி படம் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தலைவன் இருக்கின்றான் என்ற படத்தை கமல்ஹாசன் தொடங்கவுள்ளார். அனேகமாக இந்தப் படத்தை முடித்து விட்டு குருவின் படத்துக்கு கமல் வருவார் எனத் தெரிகிறது.

<< முன்செல்ல