தினாவின் இசையில் 'மகனே என் மருமகனே' படத்திற்காக பின்னணி பாடி பாடகி அவதாரம் எடு்ததுள்ளார் குஷ்பு.
ரசிகர்களை கோயில் கட்ட தூண்டும் அளவிற்கு தமிழ்நாட்டு மக்களின் லப்டப்பை எகிறவைத்தவர் குஷ்பு. குடும்பம்-குழந்தை என்று ஆன பிறகும் குஷ்புவின் கேரியர் இன்னும் டேக் ஆப் நிலையிலேயே உள்ளது. சின்னத்திரை தயாரிப்பாளர், கேம் ஷோ நாயகி, சினிமா தயாரிப்பாளர் என அடுத்த படிகளில் தன்னை உயர்த்திக் கொண்டே வரும் குஷ்புவின் லேட்டஸ்ட் அவதாரம் பின்னணி பாடகி.
ராஜ் டி.வி.தயாரிப்பில் டி.பி.கஜேந்திரன் இயக்கிவரும் படம் 'மகனே என் மருமகனே'. இப்படத்திற்கு பின்னணி பாட பிரபலமான புதிய குரலை தரவேண்டும் என இயக்குனரும், இசையமைப்பாளரும் திட்டமிட்டு குஷ்புவை தேர்வு செய்தனர். ஆரம்பத்தில் பாட மறுத்த குஷ்பு பிறகு சம்மதித்தார்.
அதன்படி தினா இசையில் சினேகன் எழுதிய...
"நட்சத்திரம் நட்சத்திரம் பூமியில் பாரு....
தினம் ராத்திரியில் உன் கனவில் வருவது யாரு..." என்ற பாடலை பாடினார்.
தான் பாடுவது இதுதான் முதன்முறை என்றாலும் மூன்று மணி நேரத்திற்குள் பாடிமுடித்து ஒலிப்பதிவிற்கு உறுதுணையாக இருந்தாராம் குஷ்பு.
பாடல் பதிவானதற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய குஷ்பு, "நான் அடிப்படையில் சங்கீதம் கற்றுக்கொண்டதில்லை. அதனால் சொந்தக்குரலில் பாடுவதென்பது எவ்வளவு கஷ்டம் என்பதை பாடிமுடிந்ததும் உணர்ந்தேன்.
என்னை பாடச் சொல்லி இயக்குனர் என்னிடம் கேட்டபோது முதலில் மறுத்தேன். தொடர்ந்து அவர் வற்பறுத்தியதால் சம்மதித்தேன். இசையமைப்பாளர் தினா எப்படி பாடுவது என சொல்லிக்கொடுத்தார். கவிஞர் சினேகனின் வரிகள் எளிமையாக இருந்ததால் சுலபமாக பாட முடிந்தது" என்றார்.