ஜெய்ஹிந்த் படத்தில் தன்னை டான்ஸ் மாஸ்டராக அறிமுகப்படுத்திய அர்ஜுனை, சிந்தனை செய் படத்தின் ஆடியோ விழாவுக்கு அழைத்து பெருமைப்படுத்தினார் அப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான அம்மா சேகர். அர்ஜுனே வெட்கப்படுகிற அளவுக்கு அவருக்கு மலர் கிரீடம் வைத்து ஆளுயர மாலை சூட்டி அழகு பார்த்தார் சேகர். பாய்ஸ் படத்தில் நடித்த நால்வரில் ஒருவரான குண்டு பையனை நினைவிருக்கிறதா? அவர்தான் இந்த படத்தின் இசையமைப்பாளர். இந்த படத்திற்காக இவரது பெயர் தமன். இவரும் வெங்கட் பிரபுவும் சேர்ந்து படங்களில் நடிக்க வருவதற்கு முன் இசைக்கச்சேரி நடத்தி வந்தார்களாம். திடீரென்று தமன் நடிகராகிவிட, எல்லா டி.வி யிலேயும் தமனின் க்ளிப்பிங்ஸ்தான். இப்போ அவரு இசையமைக்க வந்திட்டாரு. நான் நடித்துக் கொண்டும் இருக்கிறேன் என்றார் வெங்கட் பிரபு.
தன் பெயருக்கு பின்னால் அம்மா என்று அடையாளம் வைத்திருக்கும் தயாரிப்பாளரை பாராட்டுகிறேன். நமது பண்பாடு அதுதான். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் பேசினால்தான் தமிழன் என்றில்லை. தமிழ் நாட்டுக்கு நல்ல பெயர் வாங்கி தருபவர்களும் தமிழர்கள்தான் என்றார் அர்ஜுன். கொஞ்சநாளைக்கு பெங்களூரு போற உத்தேசம் இல்லே போலிருக்கு!