Tamil Cinema | Kollywood | Tamil Movies

ரசிகர்கள்உண்ணாவிரதம் : விஜய் அரசியல் அஸ்திரம்
[  08 November 2008, 05:54.48 PM ][ சினிசவுத் ]

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக விஜய்யின் ரசிகர்கள் உண்ணாவிரதம் இருப்பது, இளைய தளபதியின் அரசியல் அஸ்திரம் என்றெழுந்துள்ள கருத்து கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் பங்கேற்ற விஜய், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு தந்தி அனுப்பவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி பல்லாயிரம் பேர் தந்தி அனுப்பியதாக திரைப்பட தொழிலாளர் உண்ணாவிரதத்தில்  அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கை தமிழர்களுக்காக விஜய் ரசிகர் மன்றத்தினர் தனியாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 16-ம் தேதி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் சேகரிடம் மனு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் தனியாக உண்ணாவிரதம் இருக்கவுள்ள நிகழ்ச்சியை சினிமா புள்ளிகளில் சிலர் வேறொரு கோணத்தில் அலசுகின்றனர்.! 

விஜய்க்கு அரசியலில் குதிக்கும் திட்டம் இருப்பதாகவும் அதன் முன்னோட்டமாகவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மன்றத்திற்கென தனி கொடியே அறிமுகப்படுத்தினார்.
அவ்விழாவில், "இது மன்றத்திற்கான கொடி மட்டுமே. வேறு நோக்கம் இதில் இல்லை" என விஜய் பேசியிருந்தார். ஆனால் அரசியல் பிரவேசத்தை ஒரே நாளில் அறிவித்துவிட்டால் நடிகனாக சில சிக்கல்களை சந்திக்க வேண்டியது வரும் என்பதாலேயே விஜய் அப்படி பேசினார் என்றும் வெளிவட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. ஆக கொஞ்சம் கொஞ்சமாக காய் நகர்த்தி அரசியலில் குதிக்க வேண்டும் என்பதுதான் விஜய்யின் திட்டமாம்.

இத்தி்ட்டத்திற்கான சந்தர்ப்பமாகவே உண்ணாவிரத நிகழ்வை பயன்படுத்தி தனது ஆதரவு பலத்தை காட்டப்போகிறார் இளைய தளபதி என வெளிப்படையாக விமர்சிக்கின்றனர் சிலர்